பக்கோடா மோர்க்குழம்பு

பக்கோடா மோர்க்குழம்பு

தேவையானவை:

கடலைப்பருப்பு - 100 கிராம், பெரிய வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு , காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், புளித்த தயிர் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை:

கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவிட்டு எடுத்து மிக்ஸியில் அரைக்கவும். துவரம்பருப்பை ஊறவைத்து அதனுடன் தேங்காய், இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைக்கவும். கடலைப்பருப்பு மாவுடன் 2 வெங்காயம் மற்றும் கொஞ்சம் கறிவேப்பிலையை நறுக்கிக் கலக்கி, உப்பு சேர்க்கவும். வாணலியில் தேவையான எண்ணெய் விட்டு, மாவை சிறிய பக்கோடா உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு... கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மீதமுள்ள ஒரு வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்துக் கிளறி, தேவையான நீர் விட்டு கொதிக்கவிடவும். அரைத்து வைத்த துவரம்பருப்பு விழுது, மஞ்சள்தூள் கலந்து மேலும் கொதித்தவுடன், தயிரை ஊற்றி, செய்து வைத்திருக்கும் பக்கோடாவை போட்டு ஒரு கொதி வந்தபின் இறக்கி... தேவையான உப்பு சேர்க்கவும். சுவையான பக்கோடா மோர்க்குழம்பு ரெடி.